ஓன்றிய அரசின் மாநில உரிமைகள் மீதான தாக்குதலைக் கண்டித்துசிபிஎம் – தோழமைக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து மாநில உரிமைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் மோடி தலைமையிலான மத்திய அரசை கண்டித்து திமுக தலைமையிலான தோழமைக் கட்சிகளுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுக்கோட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வை அளிக்க மறுப்பது, பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்க மறுப்பது, ஜிஎஸ்டி வரியில் உரிய பங்கீட்டை அளிக்க மறுப்பது, மாநிலங்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவது  என கூட்டாட்சி கோட்பாட்டிற்கு விதோரமன நடவடிக்கைகளை கையாண்டு வரும் மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து புதுதில்லியில் கேரள முதர்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி நாடுமுழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக  புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டின், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னதுரை (கந்தர்வகோட்டை), வை.முத்துராஜா (புதுக்கோட்டை), திமுக இலக்கிய அணி துணைத் தலைவர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், நகரச் செயலாளர் ஆ.செந்தில், சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினர் த.சந்திரசேகரன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் இராம.சுப்புராம், எம்.முருகேசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், மதிமுக மாவட்டச் செயலாளர் கே.கலியமூர்த்தி, விசிக மாவட்டச் செயலாளர்கள் இளமதி அசோகன், கரு.வெள்ளைநெஞ்சன், இராம.தமிழ்ச்செல்வன், முஸ்லீம் லீக் அசரப் அலி, மனிதநேய மக்கள் கட்சி முகமது கனி, சிபிஐ (எம்எல்) வீ.மு.வளத்தான், திக நரகத் தலைவர் தர்மராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.