புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகங்களிலிருந்து சுமார் 550க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 28ம் தேதி கோட்டைப்பட்டினம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 300 விசைப்படகுகளில் 1,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். சர்வதேச எல்லை அருகே இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் 24 பேர் மற்றும் அவர்கள் சென்ற 5 விசைப்படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை இலங்கை அரசு உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் மத்திய, மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்ககோரியும் இன்று காலை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இலங்கை கடற்படையினர் தொடர் அத்துமீறலைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். மீனவர்சங்க கட்டிடம் முன் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் திரண்டு இலங்கை அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.