ஆசிரியர்களுக்கான இணைய வழி கணினி பயிற்சியில் ஆசிரியர்கள் உரிய நேரத்தில் கலந்து கொள்ள வேண்டும் : சாமி.சத்தியமூர்த்தி தகவல்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி 2021-22ம் கல்வியாண்டில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர  5 நாட்கள் பயிற்சி நடைபெறுகிறது.

பயிற்சி குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:- அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ஆகியவற்றில் திறன் வளர்த்தல் மற்றும் கல்வி மேலாண்மை தளத்தில் மாணவர்களின் வருகைப்பதிவு, சேர்க்கம், நீக்கல் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டுகட்ட பயிற்சிகள் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக வழங்கப்பட்டது. தற்பொழுது அதன் தொடர்ச்சியாக அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 6 முதல் 9ம் தேதி வரை மற்றும் செப்டம்பர் 11 அன்றுமாக 5 நாள்கள் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை ஆசிரியர்கள் உயர்தொழில்நுட்ப ஆய்வகத்தில் இருந்து மட்டுமே மேற்கொள்வார்கள். ஆசிரியர்கள் தாங்கள் கற்றுக்கொண்டதை செய்முறை பயிற்சியாக தாங்களாகவே கணினியில் செய்து பார்ப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் பயிற்சி நிலையத்திலிருந்து செல்லுவதற்கு முன் அந்நாளுக்குரிய பின்னூட்டத்தினை கட்டாயமாக பதிவு செய்வார்கள்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் பெருந்தொற்று காலத்தில் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மேலும் பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களும் பயிற்சி மையத்திலிருந்து செல்லுவதற்கு முன் அந்நாளுக்குரிய பின்னூட்டத்தினை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருகை தரும் ஆசிரியர்கள் காலை 9.45 மணிக்குள் தங்களது வருகையை பதிவு செய்ய வேண்டும். உரிய நேரத்திற்கு வருகை தராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

அதே போல் பயிற்சி மையங்களிலும், பள்ளியிலும் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் செயல்படுகிறதா என்பதை பார்வையிட வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி துறையினர் பார்வையிட உள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 209 மையங்களில் இப்பயிற்சி நடைபெறுகிறது. இப்பயிற்சியின் கருத்தாளர்களாக 28 பேரும், மைய ஒருங்கிணைப்பாளர்களாக 209 பேரும் செயல்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 2957 ஆசிரியர்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.