அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் ரூ.3.63 கோடி மதிப்பீட்டில்புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் – அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்தார்

செந்துறை பகுதியில் ரூ. 3.63 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்ததுடன், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு, இலவச கையேடுகளை வழங்கினார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட பொன்பரப்பி, சிறுகளத்தூர், இலைக்கடம்பூர், குறிச்சிக்குளம், துளார், தாமரைப்பூண்டி, முதுகுளம் ஆகிய கிராமங்களில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், ரூ.3.63 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  துவக்கி வைத்தார். மேலும் பொன்பரப்பி அரசு மேல்நிலைப்பள்ளி, பெரியாக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி, குறிச்சிக்குளம், முள்ளுக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளிட்டவற்றில்,  10, 11, 12 ஆம் வகுப்பில் கல்வி பயிலும், மாணவ, மாணவிகளுக்கு, தனது சொந்த செலவில் தயாரிக்கப்பட்ட வினா விடை கையேடுகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, முன்னிலையில் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரணி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர் வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி, ஊராட்சிமன்றத் தலைவர்கள், அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.