
அலங்காநல்லூர் பகுதியில் விலை இல்லாததால் கொய்யாப்பழம் விலை சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, முடுவார்பட்டி சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் மா, கொய்யா உள்ளிட்ட பழங்களை மதுரை மற்றும் முடுவார்பட்டி பழ சந்தைகளுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு 35 கிலோ எடையுள்ள கொய்யா ரூ.1000 முதல் ரூ.2000 வரை விலை போனது. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக தற்போது கொய்யா பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதனால் சந்தையில் விலை சரிந்து 35 கிலோ எடையுள்ள கொய்யா ரூ.150 முதல் ரூ.200 வரை மட்டுமே விலை போகிறது.இதனால் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காததாலும், வேலை ஆட்களுக்கு கூலி கொடுக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாலும் விவசாயிகள் குவியல் குவியலாக பழங்களை கீழே கொட்டி வருகின்றனர்.
ஒரு சில இடங்களில் கால்நடைகளுக்கு இரையாக கொட்டப்படுகிறது.இப்பகுதியில் அதிகளவில் விளையும் மா, கொய்யா பழங்களை பதபடுத்த குளிர்பதன கிடங்கும், பழகூழ் தொழிற்சாலை அமைத்து பழங்கள், காய்கறிகளை சேமித்து விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.