புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் அனைவரும் வேளாண் அடுக்குத் திட்டத்தில் பயன்பெற ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்து பயன் பெற்றுக்கொள்ளலாம் என புதுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் ச.கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் தமிழக அரசின் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் விவசாயிகள் இணைந்து பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் இந்த திட்டத்தில் விவசாயிகள் இணைந்து தங்கள் வட்டார கிராம நிர்வாக அலுவலர் வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகி விவசாயிகளின் ஆதார் எண், விவசாயிகளின் புகைப்படம், அவர்களின் வங்கி கணக்கு எண் ஆகிய விவரங்கள் மற்றும் நில உரிமை ஆவணங்களுடன் சென்று GRAINS என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பதிவேற்றம் செய்யும்போது நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயியின் விவரம் அடிப்படையில் GRAINS இணையதளத்தில் சேகரிக்கப்பட்டு வேளாண்மை உழவர் நலத்துறை பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ப்புத்துறை, உணவு வழங்கல் துறை, வேளாண்மை பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம் விதை சான்றளிப்பு துறை, வருவாய்த்துறை, சர்க்கரை துறை ஆகிய துறைகளின் திட்டங்களில் பயனடைய பயன்படுத்தப்படுகிறது.
மேலும் நிதி திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் நேரடி பண பரிமாற்றம் மூலம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாக அனுப்பப்படும்.
இதற்கான முகாம்கள் அனைத்தும் கிராமங்களிலும் வருகின்ற ஏப்ரல்13ம் தேதி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை வட்டார வேளாண் விவசாயிகள் இந்த முகாம்களை பயன்படுத்திக்கொண்டு வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு வேளாண்மை உதவி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.