விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிட் பாட்டில் தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் 4 மாணவிகள் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலை பள்ளியின் ஆய்வகம் விழுப்புரம், நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் காரணமாக இடிக்கப்பட உள்ளது. இதனால் ஆய்வகத்தை இடமாற்ற திட்டமிட்ட பள்ளி நிர்வாகம், அங்கிருந்த பொருட்களை இடமாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
12ம் வகுப்பு படிக்கும் பாமா, ஆதிஷா, ஜனனி மற்றும் நித்யா ஆகிய நான்கு மாணவிகள் தலைமை ஆசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் ஆய்வகத்தில் இருந்த பொருட்களை வெளியேற்றி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று ஆய்வகத்தில் இருந்த நைட்ரிக் ஆக்ஸைடு, சல்பர் ஆசிட் மீது கல் பட்டு வெடித்ததில் 4 மாணவிகளும் காயமடைந்தனர். இதில் பாமா என்ற மாணவிக்கு முகம் முழுவதும் ஆசிட் பட்டதால் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் புதுச்சேரியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.