
வித்தே விளைச்சலுக்கு ஆதாரம் என்ற முதுமொழிக்கு ஏற்ப தரமான சான்று விதைகளை வழங்கியும் விதைத்தரத்தினை உறுதி செய்தும் உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்பு துறை செயல்பட்டு வருகிறது.
வேளாண் துறை முலம் தரமான விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விதைச்சான்றுத் துறையால் சான்றளிப்பு செய்யப்பட்டு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விதை பெருக்கு திட்டத்தை செயல்படுத்தி வரும் உதவி விதை அலுவலர்களுக்கான விதைச்சான்று நடைமுறை குறித்த் பயிற்சி நேற்று புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கூட்ட மன்றத்தில் விதைச்சான்று துறை மூலமாக நடத்தப்பட்டது.
இப்பயிற்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவக்குமார் தலைமை தாங்கி சிறப்பித்தார். அவர் தமது உரையில் உதவி விதை அலுவலர்கள் தங்களுடைய இலக்கின்படி விதைப்பண்ணைகள் பதிவு செய்வது மடடுமல்லாமல் விதைக்கொள்முதலிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) இரா.மோகன்ராஜ் உதவி விதை அலுவலர்கள் அவரவர் வட்டார விதை திட்டத்தை செயல்படுத்துவதில் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் இரா.ஆனந்தசெல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். விதைச்சான்று அலுவலர்கள் மு.ஆமினாள் மற்றும் க.இளஞ்செழியன் ஆகியோர் விதைப்பண்ணை பதிவு செய்தல், வயலாய்வு செய்தல், சுத்தி அறிக்கை வழங்குதல், விதை சுத்திப்பணி,
சான்றட்டை பொருத்துதல் மற்றும் சிறப்பு அனுமதி பெறுதல் போன்ற விதைச்சான்று நடைமுறை பணிகள் குறித்து பயிற்சி அளித்தனர்.