இந்த ஆண்டு பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண் எனப்படும் தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் இன்று வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்காக இணையதளம் வாயிலாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் விண்ணப்பித்த அனைவருக்கும் பொறியியல் படிப்பு இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘ 1.39 லட்சம் மாணவர்களுக்கு தரவரிசை மதிப்பெண் வெளியீடப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடைபெறும்.
ஆன்லைன் மூலம் நாளை சிறப்பு பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு தொடங்கும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு விண்ணப்பங்கள் அதிக அளவில் வந்துள்ளன. எனவே காலி இடங்களை நிரப்ப 5 முறை கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டே அமலுக்கு வரும்.
செப்டம்பர் 18ம் தேதி சேர்க்கை ஆணையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொழிற்படிப்பு மாணவர்கள் 2060 பேரும் மற்றும் விளையாட்டு வீரர்களும் 1190 பேரும் விண்ணப்பித்துள்ளனர். மேலும்முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் 1124 பேரும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் 182 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 440 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. 440 கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் 1,51,870 ஆக உள்ளது. பொறியியல் படிப்பில் சேர வந்துள்ள விண்ணப்பங்களில் 1,39,083 தகுதியானவை என கண்டறியப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இடம் அளித்த பிறகும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் மிகுதியாக இருக்கும் என்றார்.