வங்கக் கடலில் புயல் சின்னம் :நாளை முதல் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா ,பஞ்சாப் ,சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் , ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்தம் மேற்கு,  வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் சின்னம் காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் வங்கக்கடல் பகுதியில் மத்திய வங்க கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதி ,வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதி ,ஒடிசா – மேற்கு வங்க கடலோரப் பகுதி, வடக்கு அந்தமான் கடல் பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 2 =