
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 சதவீதம் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
மதுரையை சேர்ந்த மகேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், ராஜேந்திர பாலாஜி முன்னாள் அமைச்சராக இருந்தபோதும், நகராட்சி தலைவராக இருந்தபோதும் வருமானத்த்திற்கு அதிகமாக 7 கோடி ரூபாய் சொத்து சேர்த்துள்ளார் என தமிழ்நாடு லஞ்சஒழிப்புத்துறையில் புகார் ஒன்றை தெரிவித்திருந்தேன். ஆனால் அப்புகாரின்மீது லஞ்சஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியிருந்தார்.
இதனத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக்கூறி தொடரப்பட்ட வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், மூன்றாவது நீதிபதி நிர்மல்குமார் விசாரித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராகி தற்போது விசாரித்து வரும் லஞ்ச ஒழிப்புத்துறை ராஜேந்திர பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக 73 சதவீதம் சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக கண்டறிந்து இருப்பதாகவும் எனவே மேற்கொண்டு விசாரணை நடத்த இருப்பதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து, லஞ்சஒழிப்புத்துறை சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்கவும் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவும் ராஜேந்திர பாலாஜி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டதை ஏற்ற நீதிபதி நிர்மல்குமார், வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.