மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பெயர்களை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
அதிமுக சார்பாக, மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர், கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதனால், தங்களுடைய எம்.பி. பதவிகளை அவர்கள் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, அவ்விரு இடங்களும் காலியானதாக, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், அந்த 2 காலி இடங்களுக்கு வரும் அக்டோபர் 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் “2021 அக்.4 அன்று, நடைபெறவிருக்கும் மாநிலங்களவை இரண்டு உறுப்பினர்கள் தேர்தலுக்கான திமுக வேட்பாளர்களாக கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளராக இருக்கக்கூடிய கே.ஆர்.என் ராஜேஷ்குமாருக்கும், தி.நகர் தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி சோமுவுக்கும் தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறகிறது. இந்நிலையில் இன்று இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.