மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு புதுக்கோட்டையில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க புதுகை வரலாறு கோரிக்கை விடுத்துள்ளது

காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு புதுக்கோட்டையில் இருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு புதுகை வரலாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்திய ஒன்றியத்தில் காலியாக இருக்கும் தமிழகத்திற்கான மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஒரு பதவிக்கு தற்பொழுது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்தை இன்று ஆண்டு கொண்டிருக்கும் திமுக நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு அந்த வாய்ப்பை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வழங்கி புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிக்கு உதவிடும் வகையிலும் தங்கள் கட்சியின் பிரதிநிதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொழுது தொகுதி அந்தஸ்தை புதுக்கோட்டை இழந்ததை மீண்டும் அங்கீகரிக்கும் விதத்தில் அந்த வாய்ப்பினை வழங்கிட வேண்டும் எனவும் புதுக்கோட்டை மாவட்ட ஒட்டுமொத்த மக்களின் சார்பாக புதுகை வரலாறு தமிழக அரசுக்கும் திமுகவிற்கும் கோரிக்கை வைக்கின்றது.

தமிழகத்தில் இருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலியாக உள்ள இரண்டு உறுப்பினர் பதவிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. மூன்றையுமே தி.மு.க.வெற்றி பெற வாய்ப்புள்ளது.
இப்போது புதுக்கோட்டையிலிருந்து ஒரு விண்ணப்பம்.
புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி காணாமல் போய் ஒரு “மாமாங்கம்” ஆகிவிட்டது. இப்போதைய தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் தான் கடைசி புதுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர். இந்த தொகுதி காணாமல் போகும்போது தி.மு.க. ஒன்றிய அரசில் அங்கம் வகித்தது. புதுக்கோட்டை திருச்சி மாவட்டத்தோடு இருந்த காலத்திலேயே புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியாக இருந்திருக்கிறது. பழைய புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதி ஐந்து பாராளுமன்ற தொகுதிகளில் பிய்த்து வீசப்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒட்டுமொத்த கோரிக்கைக்காக 2004ஆம் ஆண்டு காலகட்டத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியில் இருந்திருக்கின்றது பட்டுக்கோட்டை தற்பொழுது தஞ்சை மாவட்ட பாராளுமன்ற தொகுதியில் வருகின்றது. பழைய தொகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் ஐந்து எம்பிக்களிடம் அல்லாடவேண்டியிருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கக்கூடிய 6 சட்டமன்ற தொகுதிகளில் புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை 2 சட்டமன்ற தொகுதிகளும் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு செல்கின்றது, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு செல்கின்றது, திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்கு செல்கின்றது, விராலிமலை சட்டமன்றத் தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு செல்கின்றது. புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சிக்காக ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றால் கூட நான்கு எம்பிகள் பங்கேற்க வேண்டிய அவல நிலை இருக்கின்றது அவர்கள் 4 பேரும் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் வர வேண்டிய நிதி கட்டமைப்புகள் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் வந்து சேரும் ஆனால் அதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறவில்லை.
1948 ல் இந்திய ஒன்றியத்தில் இணைந்த முதல் இந்திய சமஸ்தானம் புதுக்கோட்டை. ‘மன்னராகப்’ போய் ‘சாதாரண குடிமகனாக’ திரும்பியதால் இறக்கின்றவரை மன்னர் ராஜகோபல தொண்டைமான் புதுக்கோட்டைக்கு வரவில்லை. இன்றைய மாவட்ட ஆட்சியரகம் தொண்டைமான் மன்னரின் புதிய அரண்மனை வளாகத்தில் தான் உள்ளது.
இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து யாரும் மாநிலங் கலவையில் உறுப்பினராக இருந்ததாகத் தெரியவில்லை.

திருநாவுக்கரசரும் மத்திய பிரதேசத்திலிருந்துதான் போயிருக்கிறார். இப்போது தி.மு.க.விற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது, இழந்த பாராளுமன்ற தொகுதிக்கு பதிலாக புதுக்கோட்டையிலிருந்து ஒரு மாநிலங்கலவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க. பாராளுமன்ற தொகுதி வேண்டுமென்ற புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கோரிக்கையை இன்றைய தி.மு.க. அரசு மாநிலங்கலவைக்கு ஒரு வாய்ப்பு தந்து நிறைவேற்றலாம் என்பது புதுக்கோட்டை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்ற புதுகை வரலாறு சார்பில் வேண்டுகிறோம்.