
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பவுன்ராஜ் மீது பெரம்பூர் போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் பவுன்ராஜ். இவர் பூம்புகார் தொகுதியில் 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அண்மையில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் பூம்புகார் தொகுதியில் அதிமுக சார்பில் பவுன்ராஜ் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
தேர்தலின்போது பெரம்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எடக்குடி கிராமத்தில் வாக்களர்களுக்கு பணம் கொடுப்பதற்காக எடக்குடி அதிமுக ஊராட்சி தலைவர் தங்கமணி (56) என்பவரிடம் பவுன்ராஜ் பணம் கொடுத்ததாகவும், தங்கமணி சட்டவிதிமுறைகளை மீறி பணம்கொடுக்க முடியாது என்று தெரிவித்ததால் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அதிமுகவில் இருந்து விலகிய தங்கமணி திமுகவில் இணைந்தார். அதிமுக வேட்பாளராக இருந்த பவுன்ராஜ் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாக தங்கமணி பெரம்பூர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி புகார் அளித்தார். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேர்தல் முடிந்த பிறகு ஏப்ரல் 23ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கமணி மனுதாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, உயர்நீதிமன்ற கீழமை நீதிமன்றத்தை அனுகி தீர்வு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதனையடுத்து தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தங்கமணி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அப்துல்கனி, தங்கமணி தொடர்ந்த வழக்கில் பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளராக இருந்த பவுன்ராஜ் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 506(2)ன் கீழ் முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார். அதனையடுத்து பெரம்பூர் போலீசார் நேற்று முன்னாள் எம்.எல்.ஏ பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.