வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைப்பெறச் செய்யவும், திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படிரூபவ், நடப்பு ஆண்டில் காரீப் பருவத்திற்கு அரியலூர் மாவட்டத்தில் ‘அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா” என்ற முகமையின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் மக்காச்சோளப் பயிருக்கு ஆண்டிமடம், குவாகம், குண்டவெளி, உடையார் பாளையம், தா.பழூர், சுத்தமல்லி ஆகிய பிர்காகளிலும், சோளப் பயிருக்கு அரியலூர், ஏலாக்குறிச்சி, கீழப்பழூர், மாத்தூர், செந்துறை, நாகமங்கலம், சுத்தமல்லி ஆகிய பிர்காகளிலும், துவரை பயிருக்கு ஏலாக்குறிச்சி பிர்காவிலும் கீழ்க்கண்டவாறு பயிர் காப்பீடு செய்ய அரசால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நடப்பு காரீப் 2021 பருவத்தில் மக்காச்சோளம், சோளம் மற்றும் துவரை பயிர்களுக்கு ஆகஸ்ட் 31ம் தேதிவரை விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
விவசாயிகள் 1 ஏக்கர் மக்காச்சோளம் பயிருக்கு ரூ.394, 1 ஏக்கர் சோளம் பயிருக்கு ரூ.228, 1 ஏக்கர் துவரை பயிருக்கு ரூ.265.30 பிரிமீயத் தொகையை செலுத்தி தங்களது பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். விவசாயிகள் பொது சேவை மையத்தில் பதிவு செய்யும் போது கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதை பெறலாம்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் காப்பீடு செய்யலாம். இது தொடர்பான விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.