அரசு தேர்வு துறையால் ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் ஊரகத் திறனாய்வு தேர்வில், புதுக்கோட்டை மாவட்டம் மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர்.
இத்தேர்வில் கல்வி மாவட்டத்திற்கு 50 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்படுவர். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று முந்தினம் அரசு தேர்வுகள் இயக்ககத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்வில் மணவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கேசவன், சரவணகுமார் மற்றும் ஜெயதர்ஷினி ஆகியோர் தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேற்று காலை பள்ளி வழிபாட்டு நிகழ்வின் போது புத்தகப் பரிசு வழங்கி, தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் ஆயிரம் வீதம், நான்கு ஆண்டுகள் வழங்கப்படும். கிராமப்புற பள்ளிகளில் தொடர்ந்து படித்தால் மட்டுமே, இந்த உதவித்தொகை பெற முடியும். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.