பெங்களூரு புகழேந்தி மீது அவதூறு பரப்பியதாக கூறியுள்ள வழக்கில் ஆக.24ம் தேதி ஓ.பி.எஸ், இ.பி.எஸ் நேரில் ஆஜராக வேண்டும் என எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் நீக்குவதாக கூறி, கட்சியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து பெங்களூரு புகழேந்தி கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் நீக்குவதாக கூறியுள்ளது, தமது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் உள்ளது. எனவே அதிமுகவை நிர்வகிக்கின்ற ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கானது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலீசியா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக எடப்பாடி கே.பழனிச்சாமியும், இரண்டாவது நபராக ஓ.பன்னீர்செல்வமும் இணைக்கப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் ஆக.24ம் தேதி இருவரும் நேரில் ஆஜராவதற்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்துள்ளார்.