புதுக்கோட்டை மின் பகிர்மான அனைத்து கோட்ட அலுவலகங்களிலும் ஜனவரி 9ஆம் தேதி நாளை முதல் 13-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை விவசாய மற்றும் வீட்டு மின் இணைப்பிற்கான பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
நமது மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, கீரனூர், திருமயம் ஆகிய ஊர்களில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகங்களில் வருகின்ற 09/01/2023 திங்கள்கிழமை முதல் 13/01/2023 வெள்ளிக்கிழமை வரை விவசாய மின் இணைப்பு மற்றும் வீட்டு மின் இணைப்பிற்கான பெயர் மாற்றம் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பெயர் மாற்றம் செய்ய விரும்பும் விவசாயிகள் மற்றும் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் உரிய ஆவணங்களுடன் அந்தந்த செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கொடுத்து சரி பார்த்த பின்பு உரிய கட்டணங்களுடன் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு இதன் மூலம் பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.