
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல்லாயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அடுத்த கைகாட்டி பகுதியில் நூற்றுக்கணக்கான வர்த்தக, வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. அதில் சையது சுல்தான் என்பவர் அறந்தாங்கி சாலையில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று அந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் காலை உணவை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அந்த உணவகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
செய்வதறியாது ஊழியர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால், தீ மளமளவென பரவியதால் உணவகத்தை விட்டு ஊழியர்கள் வெளியே சென்றனர். இதுகுறித்து உணவக ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் உணவகம் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தது. மேலும், உணவகத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசனமாகின. இந்த தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.