
புதுக்கோட்டை பெரியார்நகரை சேர்ந்தவர் உதயகுமாரி (வயது 49). இவர் ஞாயிறு இரவு மொபட்டில் தனது குழந்தையுடன் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் கம்பன்நகர் சாய்பாபா கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள், உதயகுமாரி கழுத்தில் கிடந்த 6 பவுன். தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பியோடினர். இது குறித்து, அவர் உடனடியாக டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காவல்துறை சார்பில் கம்பன் நகர், பெரியார் நகர் பகுதிகளில் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் பழுதடைந்து போய்விட்டதால் இதுபோன்ற சமூக விரோதிகள் தொடர் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட காவல்துறையும் கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை இது அவர்களுக்கு மிகுந்த சாதகமாக அமைந்து போய்விட்டது. செயின் பறிப்பில் நிலை தடுமாறி கீழே விழுந்த உதயகுமாரியும் அவரது குழந்தையும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வருகின்றனர்.