புதுக்கோட்டை நகராட்சியில் கூடுதல் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புதுக்கோட்டை நகராட்சி மக்களுக்கு விரைவாக கோவிட் 19 தடுப்பூசி செலுத்த ஏதுவாக ஏற்கனவே புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் காமராஜபுரம், கோவில்பட்டி மற்றும் நகர்மன்ற கட்டிடத்தில் தினசரி தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் கூடுதலாக நான்கு இடங்களில் நிலையான தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அதன்படி, திருக்கோகர்ணம் நகராட்சித் துவக்கப்பள்ளி, காந்திநகர் நகராட்சித் துவக்கப்பள்ளி, ராஜகோபாலபுரம் நகராட்சித் துவக்கப்பள்ளி, அசோக் நகர் துவக்கப்பள்ளி ஆகிய நான்கு இடங்களில் கூடுதலாக தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அவரவர் பகுதிகளுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.