புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதையொட்டி காலையில் இருந்தே நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும், மஞ்சள் ஆடையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்குச் சென்று தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். நகரெங்கும் அன்னதானம், தண்ணீர் பந்தல்கள், பல்வேறு இசை ஒளிகள் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து இரவு 7 மணியில் தொடங்கி அதிகாலை 4 மணிவரை புதுக்கோட்டை மாலையீடு, ராஜகோபாலபுரம், டிவிஎஸ் கார்னர், நிஜாம் பாக்கு தொழிலாளர்கள், அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், சாந்தநாதபுரம் நான்காம் வீதி, பூங்காநகர், மச்சுவாடி, காமராஜபுரம், பிருந்தாவனம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், மின் அலங்கார ஊர்திகளில் வைக்கப்பட்ட அம்மன் உருவச்சிலையுடன் யானை, சௌரட் குதிரையிலும் பூத்தட்டு ஏந்தி கோயிலுக்குச் சென்று பூக்களை காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டனர்.

அதே வேளையில் நகரின் பல்வேறு பகுதிகளில் கரகாட்டம், ஒயிலாட்டம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் விடியும் வரை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.