புதுக்கோட்டை சிவபுரம் ஜெ.ஜெ. கல்லூரியில் வேதியியல் துறை ரெசனான்ஸ் சங்கம் சார்பில் சிறப்பு விரிவுரையானது, இன்று நடைபெற்றது. இதில், திருச்சிராப்பள்ளி, ஹோலி கிராஸ் கல்லூரி, வேதியியல் துறை, உதவிப் பேராசிரியர் கிறிஸ்டினா ரூபி ஸ்டெல்லா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு அணைவு வேதியியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர்தம் உரையில், அணைவு வேதியியலின் அடிப்படைக் கருத்துக்களான, இரட்டை உப்புக்கள், அணைவுச் சேர்மங்கள், மைய உலோக அயனி, ஆக்ஸிஜனேற்ற நிலை, ஈனிகள், ஈனிகளின் வகைகள், அணைவு எண் மற்றும் அணைவு கோளம் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக விளக்கினார்.
அணைவு வேதியியலின் முக்கிய கொள்கைகளான, வெர்ணர் அணைவுச் சேர்மக் கொள்கை மற்றும் இணைதிறன் பிணைப்புக் கொள்களைகளைப் பற்றி தெளிவாக எடுத்துக் கூறினார். அதன் பயன்களாகிய சாயம் தயாரித்தல், நீரின் கடினத்தன்மையை அறிந்து, கடின நீரை மெண்ணீர் ஆக்குதல், புற்று நோய்க்கு எதிராக செயல்படும் வேதி சிகிச்சை, ரத்தத்தில் காணப்படும் ஹீமோகுளோபின், தாவரங்களில் உள்ள குளோரோபில் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார். இறுதியில் மாணாக்கர்களின் கேள்விகளுக்கு விடைஅளித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு துறைத் தலைவர் முத்துக்குமார் தலைமை தாங்கினார், உதவிப் பேராசிரியர் கலைவாணி, விருந்தினரைக் கௌரவித்தார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, உதவிப் பேராசிரியர்களான சிவக்குமார், ஜெகஜீவன்ராம், கலைச்செல்வி, செல்வி உலகு மற்றும் செல்வி சந்தியா, பிரியா ஆகியோர் செய்திருந்தனர். முதுநிலை முதலாம் ஆண்டு மாணவி, செல்வி ஹரிதா வரவேற்புரையும், இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவன் பரஞ்சோதி நன்றியுரையும் ஆற்றினர்