புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் துணைமின் நிலையம் அமைக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்துடன் நடைபெற்று வருகிறது. இதில் இன்று கேள்வி நேரத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முத்துராஜா பங்கேற்று பேசுவையில்:- 2021-22 ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடவாளம் ஊராட்சி சின்னையாசத்திரத்தில் புதிய துணை மின் நிலையம் 110 கேபியில் துவங்குவதற்கு திமுக அரசால் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையிலும் பணிகள் தொடங்கவில்லை. மருத்துவக் கல்லூரி, புதிதாக அமையுள்ள பல் மருத்துவக் கல்லூரி, புதிதாக அமைய முள்ளூர் துணைக்கோள் நகரம், மச்சுவாடி தொழிற்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு தற்பொழுது புதுக்கோட்டை சிப்காட்டில் இருந்து கோவில்பட்டி, மச்சுவாடி வழியாக மின்சாரம் செல்கிறது. சிறிய காற்று, மழை பெய்தால் கூட உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் மேற்கண்ட பகுதியில்110 கேபியில் துணை மின் நிலையம் அமைத்துக் கொடுத்தால் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று பேசினார்.

இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்து பேசுகையில்:- புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இரண்டு இடங்களில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு முதலமைச்சர் அனுமதிகளை வழங்கிருக்கின்றார். மணமடை துணை மின் நிலையத்திற்கான மதிப்பீடு 5 கோடி 46 லட்சம், சின்னையாசத்திரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு 10 கோடி 63 லட்சம் நிதிகளை வழங்கி அதற்கான ஒப்புதலை முதலமைச்சர் வழங்கி இருக்கின்றனர். விரைவில் அந்தப் பணிகள் தொடங்கும் என்று அவர் தெரிவித்தார்.