சர்வதேச மகளிர் தின விழாவினை முன்னிட்டு காரைக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (காரைக்குடி மண்டலம்) மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் (லோன் மேலா) விழா, புதுக்கோட்டை திலகர் திடலில் இயங்கி வரும் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த மகளிர் தின விழாவில் காரைக்குடி மண்டல மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) லீனா கலந்து கொண்டு சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு 5 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவியினை வழங்கி மகளிர் தின எழுச்சி உரையாக சுய முன்னேற்றம் குறித்து சிறப்பான கருத்துக்களை எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஐஓபி ஆர் செட்டி நிறுவனத்தில் சணல் பை தயாரிக்கும் பயிற்சி எடுத்தவர்களுக்கு சான்றிதழும் தையல் பயிற்சி முடித்து தொழில் துவங்கும் நிலையில் உள்ளவர்களுக்கு கடன் உதவியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் அமுதா, கண்ணன், நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் ஜெயஸ்ரீ, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியினுடைய முதன்மை மேலாளர் எழிலரசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியினை ஐஓபி ஆர் செட்டியினுடைய ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரேசன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் ஐஓபி ஆர் செட்டி இயக்குனர் கலைச்செல்வி நன்றி கூறினார்.