அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறி செயல்படும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த 1ம் தேதி (புதன்கிழமை) முதல் 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலோடு வருவாய்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி மற்றும் பேரூராட்சிகள் துறை ஆகியோரின் ஒத்துழைப்போடு அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
அதனைத்தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறுகிறதா? என பள்ளிகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளிகளை ஆய்வு செய்யும்போது சில பள்ளிகள் அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றாதது தெரிய வருகிறது.
எனவே இனி பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யும்போது அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றாதது தெரிய வந்தால் அது சம்பந்தமாக பள்ளிக்கல்வி ஆணையர், மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு அதன்வாயிலாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆகையால் அனைத்து பள்ளிகளும் அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்ற வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.