
தமிழக அரசின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், வட்டார கல்வி அலுவலர் பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று தேர்வுகள் நடைபெற்றது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் இன்று நடைபெற்ற வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வினை, மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழக அரசின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், வட்டார கல்வி அலுவலர்களுக்கான பணிகளுக்கு தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது, அதன்படி தமிழகம் முழுவதும் இன்று சீஇஒ தேர்வு நடைபெற்றது.
புதுக்கோட்டையில் பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி, இராணியார் அரசு மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி,செயின்ட் மேரிஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வுகளில் விண்ணப்பித்த 1,134 நபர்களில் 940 நபர்கள் வருகைதந்து தேர்வினை எழுதினர். 194 நபர்கள் தேர்விற்கு வருகை தரவில்லை, மேலும் தேர்வு மையத்திற்குள் கைப்பேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. இத்தேர்வினை முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் கண்காணித்தனர். இத்தேர்வு நிகழ்வுகளை வீடியோகிராபர்கள் மூலமாக கண்காணித்து தேர்வு நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது, தேர்வுகள் நடைபெற்று வரும் அனைத்து மையங்களிலும் தேர்வுகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வில் எவ்வித முறைகேடுகளுமின்றி தேர்வர்கள் எழுதிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்தார், இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம்.மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.