பிரபல யூடியுபர் பப்ஜி மதன் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை அறிவுரைக் கழகம் உறுதி செய்தது.
பப்ஜி மதன் மீது, பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஆபாசமாகப் பேசிக்கொண்டே விளையாடியதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்தனர்.
இதனைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். ஏராளமான புகார்கள் வந்ததால், அவரை சைபர் சட்ட குற்றவாளி எனக் கூறி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர், ஜூலை 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் பப்ஜி மதன் ஆஜர்படுத்தபட்டார்.
அப்போது பப்ஜி மதன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டிய அளவுக்கு நான் எந்தவித தவறும் செய்யவில்லை என்றும், எனவே தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் வாதாடினார்.
இந்நிலையில் பப்ஜி மதன் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அறிவுரை கழகம் உறுதி செய்துள்ளதாக கூறியுள்ளது.