பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி

பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றவாளிகளான 9 பேரில் 7 பேருக்கு இரட்டை தூக்குத் தண்டனை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் என்ற பகுதியில் ரூ.10 கோடி மதிப்பிலான நிலம் தொடர்பான பிரச்சனையில், சென்னையிலிருந்த பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் கொல்லப்பட்டார்.

இது சம்பந்தமாக அவருடைய மைத்துனர் அளித்த புகாரின்பேரில் காவல்துறையினர் கூலிப்படையினர்கள், ஆசிரியர் மற்றும் வழக்கறிஞர்கள் உட்பட 10 பேரை கைது செய்திருந்தனர். அதில் ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆன நிலையில் சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தநிலையில் அப்ரூவர் ஆன ஐயப்பனை தவிர மற்ற 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டு அவர்களுக்கு தண்டனைகளும் இன்றே வழங்கப்பட்டன.

அதன்படி, குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட 9 பேரில் குற்றம்புரிந்தவர்களில் தீவிர குற்றம் புரிந்தவர்களான பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு இரட்டை தூக்கு என்ற அடிப்படையில் கொலை வழக்கு மற்றும் கூட்டு சதி என்ற இரண்டு பிரிவுகளில் தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குற்றவாளிகளான மேரி புஷ்பம் மற்றும் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள்தண்டனை விதித்தும், அப்ரூவர் ஐயப்பனுக்கு தண்டனை கிடையாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.