
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான ஜூலை 15 (சனிக்கிழமை) இன்று பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவேண்டும் என்று அரசு அறிவுறுத்தலின்படி இன்று காலையில் ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா கலந்துகொண்டு பெருந்தலைவர் காமராசரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து ஆலங்குடி காமராசர் சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசரின் சிலைக்கு ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்த நிகழ்வில் மாவட்ட முதன்மைக்கல்வி கலந்துகொண்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராசர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (உயர்நிலை) ராஜூ,முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் கி.வேலுச்சாமி, ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர்.