
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள அம்பிகாபுரம் பகுதியில் அவ்வப்போது கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் இரவு நேரத்தில் உலா வருவது வழக்கமாகவுள்ளது. இதனால் பொதுமக்கள் பயத்திலே உள்ளனர். மேலும் அந்த பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டமும் குறைந்தே காணப்படும். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இங்கு வசித்து முருகன் என்பவரின் பங்களாவின் சுவரை தாண்டி சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் புகுந்தது. சிறிது நேரம் அங்கேயே சுற்றி திரிந்தது. அங்கு எந்த உணவும் கிடைக்காததால் மீண்டும், கேட்டை எகிறி குதித்து திரும்பிச் சென்றது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. இதை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அன்மைக் காலமாக இந்த பகுதியில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் தேயிலை தோட்டங்களில் வேலை செய்பவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள், ஆடு மாடு மேய்ப்பவர்கள் அச்சமடைந்துள்ளனர், எனவே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.