செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ராஜஸ்தானை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் தேர்வு தொடங்கியதும் தேர்வறை கண்காணிப்பாளரான ராம் சிங் மற்றும் தேர்வு மைய பொறுப்பாளர் முகேஷ் ஆகியோர், வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து சித்ரகூட் பகுதியில் தங்கியிருந்த இரண்டு பேருக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளனர்.
அந்த நபர்கள் சிகார் பகுதியில் வேறு சிலருக்கு வினாத்தாளை அனுப்பி, அவர்கள் மூலம் சரியான விடைகளைப் பெற்றுள்ளனர். அங்கிருந்து முகேஷுக்கு விடைகள் கிடைக்க, அதனை வாட்ஸ்-அப் மூலம் பெற்ற ராம் சிங், தினேஷ்வரி குமாரி என்ற மாணவிக்கு விடைகளைத் தெரிவித்துள்ளார். இதற்காக ரூ. 35 லட்சம் பேரம் பேசப்பட்டு, தேர்வுமைய வளாகத்திலேயே 10 லட்ச ரூபாய் கைமாறியுள்ளது. இதையடுத்து தேர்வு மைய அதிகாரி, மாணவி உட்பட 8 பேரை போலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.