
சேலம் மாவட்டத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்த மாவணர் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்-ரேவதி தம்பதியின் மகன் தனுஷ்(20). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாசிலாபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்து, மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வுக்கு தயார் ஆகி வந்துள்ளார்.
இதுவரை 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான மதிப்பெண் கிடைக்காத காரணத்தால், இன்று 3-வது முறையாக தனுஷ் நீட் தேர்வு எழுத இருந்தார். இதற்காக அவர் தீவிரமாக தயாராகியும் வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு 1 மணி வரை மாணவர் தனுஷ் தனது தந்தையுடன் பேசிக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், அதன் பிறகு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வு குறித்த அச்சத்தால், தனுஷ் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவர் ஆகும் கனவோடு நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர், இன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூழையூர் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.