நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்காமல் இருப்பது தேசத்துக்கே அவமானம்: சீமான் குற்றச்சாட்டு

ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது அவருக்கு மட்டும் அவமானம் இல்லை. தேசத்துக்கே அவமானம் என சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் திருப்பத்தூரில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது அவருக்கு மட்டும் அவமானம் இல்லை. தேசத்துக்கே அவமானமாகும்.

காவிரி தண்ணீரை வைத்து கர்நாடக மாநிலம் அரசியல் செய்கிறது. இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என்றால், ஒரு யூனிட் மின்சாரமும் இல்லை என்ற நிலை வர வேண்டும். இதை திமுக கேட்காது, பேசவும் செய்யாது. ஒரு நாட்டில் உள்ள எல்லா வளங்களும் எல்லா மக்களுக்கும் பொதுவானது என்ற நிலை வந்தால் தான் தேசப்பற்று பெருகும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இப்போதுள்ள சூழ்நிலையில் செயல் அரசியல், சேவை அரசியல் எல்லாம் கிடையாது. செய்தி அரசியல் மட்டுமே இங்குள்ளது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் நிறைய உள்ளன’’ என்று சீமான் கூறினார்.