
காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்களுக்கு கல்வி, மாற்று தொழில் உள்பட பல்வேறு உதவிகள் வழங்குவதற்கு நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினர்களை சேர்த்து, அவர்களுக்கு இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்குவது போல் பல்வேறு உதவிகள் வழங்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.
நரிக்குறவர் இனத்தை சார்ந்த 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, உறுப்பினர்களுக்கு விபத்தினால் ஏற்படும் ஊனம், மரணம், இயற்கை மாணம், ஈமச்சடங்கு, கல்வி, திருமணம், மகப்பேறு உதவி தொகை உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறலாம்.
சுயதொழிலுக்கு மானியம் வழங்கும் திட்டமும் உள்ளது. எனவே, மாவட்டத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள், நரிக்குறவர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகளைப் பெறலாம். இதற்கு, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி உரிய படிவத்தை பூர்த்தி செய்து, ஆவணங்களுடன், உரிய காலத்துக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என கூறப்பட்டுள்ளது.