சட்டபேரவையில் ஆர்.பி.உதயகுமார் கேள்விக்கு, தேர்தல் வாக்குறுதிகளிலிருந்து பின் வாங்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடங்கியது. அப்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்கவே வெள்ளை அறிக்கை. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காலந்தாழ்த்த நினைக்கிறது திமுக என அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்க மாட்டோம். அதிமுக நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் பெரிய பட்டியலே உள்ளது. அதிமுக கூறிய வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டதா? எனக் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், இலவச செல்போன் கொடுப்போம் எனக் கூறினீர்களே, கொடுத்தீர்களா?.
மோனோ ரயில் திட்டம் வரும் என கூறினீர்களே, கொண்டுவந்தீர்களா?, கோ – ஆப்டெக்ஸில் துணிவாங்க ரூ.500 கூப்பன் கொடுப்பதாக அதிமுக கூறியது; அது நிறைவேற்றப்பட்டதா?. தமிழகத்தின் நிதிநிலை சரிசெய்யபட்டதும், தேர்தல் நேரத்தில் திமுக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.