
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பெற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் நலவாரிய நலதிட்ட உதவிகள் உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் 07 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.13,500/- வீதம் மொத்தம் ரூ.94,500/- மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள்களையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 6- பயனாளிகளுக்கு தலா ரூ.5,479 வீதம் மொத்தம் ரூ.32,874/- மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களையும், தாட்கோ மூலம் 14 பயனாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் நல வாரிய அட்டைகளையும் என மொத்தம் ரூ.1,27,374/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி வழங்கினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டாமாறுதல், மாற்றத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என 365 மொத்தம் மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் முருகானந்தம், மாவட்ட மேலாளர் (தாட்கோ) ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரா.இளவரசி மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.