
திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(40). இவர் தனியார் நிறுவன ஊழியர் ஆவார்.
இந்நிலையில் நேற்று ராஜேஷ்குமார் தனது தாயாருடன் வீட்டை பூட்டிவிட்டு வேப்பம்பட்டில் உள்ள பள்ளியில் உறவினர் குழந்தையை விட்டு வர சென்றனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 சவரன் தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து ராஜேஷ்குமார் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.