திருவண்ணாமலை மாவட்டத்தில் 973 இடங்களில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 973 மையங்களில் நாளை மறுநாள் மாபெரும் கொரோனோ தடுப்பூசி முகாம் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு அலுவலர்கள் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து விளக்கிக் கூறி அறிவுறுத்தி பேசினார்.

பின்னர்  நிருபரிடம் கூறியதாவது:-

கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக முக கவசத்துடன் வாழ்ந்து வருகிறோம். இதனைத் தவிர்க்க கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 62 ஆயிரத்து 896 ஆகும். நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 39 ஆயிரத்து 261 பேர் முதல் தவணை தடுப்பூசியும் 1 லட்சத்து 45 ஆயிரத்து 257 பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இதனால் நாளை மறுநாள் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில் 1 லட்சத்து 24 ஆயிரம் தடுப்பூசிகள் போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 82 ஆயிரம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடவில்லை. எனவே மாவட்டத்திலுள்ள 860 ஊராட்சி,10 பேரூராட்சி,4 நகராட்சி ஆகியவற்றில் 973 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை முகாம் நடைபெறும். 18 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஒரு முகாமிற்கு 3 நபர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் ஊரக வளர்ச்சித் துறை,வருவாய்த்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்,கூட்டுறவுத் துறை அலுவலர்களும் உடன் இருந்து பணியாற்றுவார்கள். இதன் ஒரே நோக்கம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். மேலும் நாளை முதல் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே விற்பனை நடைபெறும், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கூடுதல் கலெக்டருமான பிரதாப், மாவட்ட வன அலுவலர் அருண்லால் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.