தமிழகத்தில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவித்து மீனவர்கள் பல்வேறு போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்க வேண்டும் இல்லையென்றால் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு உள்ளிட்ட கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மீறி கடலில் மீன் பிடிக்கச் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப் பிரிவு போலீஸார் தடைகளை மீறி மீன்பிடித்து வரும் படகுகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து சரியான முறையில் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என ஆத்திரமடைந்த பூம்புகார் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த சுருக்குமடி வலை ஆதரவு மீனவர்கள் கடந்த 14 ஆம் தேதி அன்று தங்களது விசைப்படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதனை அறிந்த வானகிரி மீனவர்கள் அவர்களை தடுப்பதற்கு தங்களது பைபர் படகுகளை எடுத்துக்கொண்டு கடலுக்கு சென்றனர்.
தங்களை தடுக்க வருவதை பார்த்த திருமுல்லைவாசல் மீனவர்கள் பைபர் படகின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினர்.
இதில் வானகிரி மீன கிராமத்தைச் சார்ந்த ராம்குமார், வினோத், சிலம்பரசன் உள்ளிட்ட 3 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர் மேலும் வானகிரி மீனவகிராம கிராமத்தைச் சேர்ந்த படகு முற்றிலும் சேதம் அடைந்தது.
இதனை அறிந்த வானகிரி கிராம மீனவர்கள் தங்களது கிராமம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பூம்புகார் மீனவருக்கு சொந்தமான நான்கு பைபர் படகுகளுக்கு தீ வைத்து தப்பித்துச் சென்றனர்.
இது தொடர்பாக கடலோர காவல் படையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் 4பேரை கைது செய்தனர். தொடர்ந்து இரு தரப்பு மீனவ கிராமங்களிலும் விசாரணை நடைபெற்று வரும் சூழலில் படகுகள் மோதலுக்கு காரணமான விசைப்படகை பறிமுதல் செய்ய திருமுல்லைவாசல் மீனவர் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் தலைமையில் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், பாலமுருகன், ரமேஷ் கிருஷ்ணன், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் லாமேக் மற்றும் வருவாய்த்துறையினர், மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல்படையினர் வரவழைக்கப்பட்டு. மோதலுக்கு காரணமான விசைப்படகு மற்றும் தடைசெய்யப்பட்ட சுருக்கு மடி வலைகளை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
சுருக்கு மடி வலைகள் மதிப்பு ரூபாய் 30 லட்சம் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகின் மதிப்பு ரூ.1கோடி ஆகும்.