திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
மொத்தம் 12 நாட்களுக்கு நடக்கும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சாமி உற்சவம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் நடைபெறுகின்றன. இதன் தொடர்ச்சியாக மார்ச் 4-ஆம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். அன்று பகல் 11.30 மணிக்கு பச்சை சாத்திபச்சைநிற கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுக்கிறார். இவ்விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ஆம் திருநாள் தேரோட்டம் மார்ச் 6-ஆம் தேதியன்று நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி வெளி வீதி நான்கிலும் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர். 7-ஆம் தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாகித்தனர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.