திருக்குறள் பயிலும் ஆஸ்திரேலியா குழந்தைகள் : திருக்குறள் கற்று தரும் தஞ்சை மாணவி தேவஸ்ரீ

தஞ்சாவூரை சேர்ந்த குணசேகரன் சாந்தி தம்பதியரின் மகள் தேவஸ்ரீ(14). இவர் தஞ்சையில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தேவஸ்ரீ 1330 திருக்குறளையும் முழுமையாக படித்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தி தனது வீட்டில் தினந்தோறும் திருக்குறளை பலகையில் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். இதனையடுத்து பல்வேறு பாராட்டு சான்றிதழ்களையும் தேவஸ்ரீ பெற்றுள்ளார்.

இந்நிலையில் இந்த செய்தியினை இணையதளத்தில் பார்த்த ஆஸ்திரேலியா வாழ் தமிழர்கள் தங்களது குழந்தைகளும் திருக்குறள் பயிலுவதற்கு தேவஸ்ரீயை தொடர்பு கொண்டுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள குழந்தைகள் திருக்குறள் பயில இணையதளம் மூலம் தினந்தோறும் திருக்குறள் வகுப்பினை தேவஸ்ரீ இலவசமாக நடத்தி வருகிறார்.

கடந்த டிசம்பர் 2020 முதல் கொரோனா லாக்டவுன் காலத்தில் தொடங்கிய இந்த திருக்குறள் வகுப்பு இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுநாள் வரை 34 அதிகாரங்கள் மூலம் 340 திருக்குறள்களை ஆஸ்திரேலியா குழந்தைகள் கற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமிகள் மகிழினியா, பிரஷிதா, மாயா, நிவேதிதா, சர்வதாயினி, நித்தியஸ்ரீ, விகாஷ், கபிலேஷ், ஹர்ஷினி, நட்சத்திரா ஆகிய 10 பேர் திருக்குறள் கற்று வருகின்றனர்.

இந்த திருக்குறள் வகுப்பில் தாங்கள் பயின்ற திருக்குறளை சிறுமிகள் பிழையின்றி தெரிவிக்கின்றனர். மேலும் சிலர் தங்களது வீடுகளில் பலகையில் திருக்குறளை எழுதி விழிப்புணர்வும் ஏற்படுத்துகின்றனர்.

இதுகுறித்து தேவஸ்ரீ கூறும்போது, திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ஆஸ்திரேலியா குழந்தைகளுக்கு பணியாக கற்று தருவதாகவும், வாரத்திற்கு ஒரு அதிகாரம் வரை கற்று கொடுப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அதேபோல் நிறைய நாடுகளுக்கு இந்த திருக்குறளை கொண்டு செல்ல வேண்டும் என்பது கனவு என்றும் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த குழந்தையின் தாயார் மஞ்சுளா கூறுகையில், திருக்குறளை குழந்தைகள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர். தமிழ் மேல் உள்ள பற்று காரணமாக திருக்குறளை கற்று கொள்ள பெற்றோர்கள் ஆர்வம் ஊட்டுகின்றனர் என தெரிவித்தார். குழந்தைகளும் ஈடுபாட்டுடன் கற்று வருகின்றனர். வேதம் நிலையில் உள்ள திருக்குறளை குழந்தைகளுக்கு கற்று தரவேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் திருக்குறளை கற்று கொடுக்கிறோம் என்று தெரிவிக்கின்றனர்.