திருக்காட்டுப்பள்ளி,ஜன.21-
திருக்காட்டுப்பள்ளி அருகே பிளஸ் 2 மாணவி பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம்(47). இவரின் முதல் மனைவி கனிமொழி. இவர்களது மகள் லாவண்யா (வயது 17). கனிமொழி, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததால் லாவண்யாவை தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைபள்ளியில் 8ம் வகுப்பில் சேர்த்துள்ளனர். தற்போது அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி 12ம் வகுப்பில் படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 9ம் தேதி லாவண்யா தனக்கு வயிற்றுவலி என கூறியதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, மறுநாள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு முருகானந்தம் தன் மகள் லாவண்யாவை அழைத்து சென்றுள்ளார். பின்னர் லாவண்யாவின் உடல் நிலை மோசமானதால் கடந்த 15ம் தேதி தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.அங்கு பரிசோதித்த டாக்டர்களிடம் மாணவி லாவண்யா, தான் பூச்சி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று விடுதி காப்பாளர் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அம்மருத்துவர்கள் இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க போலீசார் மாணவி லாவண்யாவிடம் தொடர்ந்து விசாரித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வார்டன் சகாயமேரியை (வயது 62) கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி லாவண்யா இறந்து விட்டார். இச்சம்பவம் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.