
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளியிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய தனி தாசில்தாரை நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே காரைமேடு கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ( 61) என்பவரின் மனைவி தையல்நாயகி. மாற்று திறனாளி. இவருக்கு மாற்று திறனாளி சான்று வழங்கி உதவி தொகை கோரி தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் பாலமுருகனிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு ரூ. 2000 லஞ்சம் தர வேண்டும் என்று சமூக பாதுகாப்பு நலத்துறை தனி தாசில்தார் பாலமுருகன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத ராமச்சந்திரன் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் மனு கொடுத்தார். புகாரை பெற்று கொண்ட நாகை லஞ்ச ஒழிப்பு துறை காவல் துணை சூப்பிரண்டு சித்திரவேலு தலைமையில் லஞ்சம் ஒழிப்பு காவல் ஆய்வாளர்கள் ரமேஷ்குமார், அருள்மொழி மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் தரங்கம்பாடி தாசில்தார் அலுவலகத்திற்கு மாறுவேடத்தில் வந்தனர்.
அப்போது ராமச்சந்திரனிடம் காவல் துறையினர் ரசாயன பவுடர் தடவிய ரூ. 2 ஆயிரத்தை கொடுத்து அனுப்பி ரகசியமாக கண்காணித்தனர். ராமச்சந்திரன் இடமிருந்து கையூட்டாக பணத்தை பெற்று கொண்ட தனி தாசில்தார் பாலமுருகனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.