தமிழக வேளாண் பட்ஜெட் : அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெளியீடு

தமிழக சட்டசபை வரலாற்றில், முதல் முறையாக வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, நடப்பாண்டில் 30 மாவட்டங்களில் 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் பனை மரத்தை வெட்ட நேரிட்டால் மாவட்ட கலெக்டரின் அனுமதியை பெறுவது கட்டாயம். பனை வெல்லத்தை ரேசன் கடைகள் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பனை மேம்பாட்டு இயக்கம் ரூ.3 கோடியில் செயல்படுத்தப்படும்.

உணவு தானிய உற்பத்தியில் நடப்பாண்டு 125 மெட்ரிக் டன் என்ற இலக்கை எய்திட திட்டமிடப்பட்டுள்ளது. தென்னையில் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாக சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தென்னையில் பாதிப்பை ஏற்படுத்திடும் வெள்ளை ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகைக்கு ரூ.40 கோடி ஒதுக்கீடு. கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.42.50 வழங்கப்படும். கரும்பின் பிழிதிறனை அதிகரிக்கும் வகையில் சிறப்புத் திட்டத்திற்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு. கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 2,750ல் இருந்து ரூ.2,900 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.