தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் – மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:- சர்வதேச சட்டங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றாமல், நமது மீனவர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பது கண்டனத்திற்குரியது. இந்த சூழலை நாம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது, உடனடியாக தீர்வு காண வேண்டும். இந்திய மீனவர்கள் மீது எவ்விதமான வன்முறையையும் நிகழ்த்தக் கூடாது, படகுகள், வலைகளை சேதப்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

பல்லாயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும், இந்த பிரச்சனைக்கு நீடித்த அரசியல் தீர்வை காண வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.