
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்க்கு பஞ்சாப் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெவித்துள்ளார்.தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். ரவி, நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார். ரவீந்திர நாராயண ரவி என்ற முழு பெயரை கொண்ட அவர், பீகாரில் பிறந்தவர். கடந்த 1976ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கினார், மத்திய மற்றும் மாநில அரசு பொறுப்புகளை வகித்து ஓய்வு பெற்றவர்.
உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என்.ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். இவர் 1974-ல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்த பின்னர், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.
கேரளாவில் அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார். மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையிலும் இவர் பணியாற்றியுள்ளார்.உளவுத்துறை பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த தீவிரவாத குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார். 2012ல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய நாளிதழ்களில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடனான கட்டுரைகளை எழுதி வந்தார்.
பின்னர் ஆர்.என்.ரவி பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட, கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிகாட்டியாக செயல்பட்டார்.2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் நாள், நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். நாகாலாந்து ஆளுநராகபதவியேற்ற இரண்டு ஆண்டுகளில், தற்போது தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என். ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது! என்று தெரிவித்து உள்ளார்.