தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,542 -ல் இருந்து 1,551 ஆக சற்று உயர்ந்தது. 21 பேர் உயிரிழந்து உள்ளனர். 1,768 பேர் குணமடைந்து உள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,63,230 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில்,1,551 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,10,299 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 4,18,53,989 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கோவிட் உறுதியானவர்களில் 872 பேர் ஆண்கள், 679 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 15,24,281 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,85,980 ஆகவும் அதிகரித்து உள்ளது. 1,768 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,57,884 ஆக உயர்ந்துள்ளது.
21 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 9 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 12 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,856 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிகை அதிகரித்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக இருந்த நிலையில் இன்று (28ம் தேதி) 182 ஆக அதிகரித்துள்ளது.