தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிரொலி : 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வருகிற 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய உத்தரவு

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களில் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வருகிற 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட போது வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு அவற்றில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் முழுமையாக வகுக்கப்படாமல் இருந்ததால், அந்த 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், விரைவில் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது.

அதன்படி, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களிலும் 3 ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரியும் ஊழியர்களை வருகிற 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலக சங்கத்தினர் கூறுகையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி ஊரக வளர்ச்சி துறையில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷன் உத்தரவிட்டுள்ளது.

அந்த பணிகளை விரைந்து செய்யாமல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 2 மாவட்ட நிர்வாகத்தினர் மெத்தனமாக உள்ளனர். எனவே தேர்தல் கமி‌ஷன் உத்தரவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.