
தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ்., எம்.எல்.ஏ.க்களை இழுக்க ரூ.100 கோடி பேரம் பேசியது தொடர்பாக பா.ஜ.,வுக்கு எதிராக வீடியோ ஆதாரத்தை அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்ட சம்பவம் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் டி.ஆர்.எஸ்., கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் பைலட் ரோகித் ரெட்டி, ரேகா காந்தாராவ், பால ராஜு, ஹர்ஷவர்த்தன் ஆகியோரை கடந்த வாரம் மொய்னாபாத் அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் டெல்லி ராமச்சந்திர பாரதி, ஐதராபாத் நந்தகுமார், திருப்பதி சின்மலயா ஜி ஆகியோர் சந்தித்ததாகவும், அப்போது டி.ஆர்.எஸ்., கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்தால் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.400 கோடி தருவதாக பேரம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற சைபராபாத் போலீசார் எம்.எல்.ஏ.,க்களுடன் பேரம் பேசிக்கொண்டு இருந்த ராமச்சந்திர பாரதி, சின்மலயா ஜி, நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். பண்ணை வீட்டில் எம்.எல்.ஏ.,க்களுடன் நடந்த சந்திப்புக்கு ஒரு வாரம் முன்னதாக எம்.எல்.ஏ., பைலட் ரோகித் ரெட்டி, ராமச்சந்திர பாரதி ஆகியோரை இடைத்தரகர் நந்தகுமார் கான்ஃபரன்ஸ் மூலம் ஃபோனில் இணைத்து உரையாடிய ஆடியோ வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இடையே சைபராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்ட 3 பேரும் சைபராபாத் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பணம் கைமாறியதற்கான ஆதாரம் இல்லாததால் 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் போலீசார் அவசர வழக்கு தொடுத்தனர். அப்போது நீதிபதி, 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ., பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் வெளியிட்ட பின் கூறியதாவது:- எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களுடன், பா.ஜ., சார்பில் பேரம் பேசிய 3 மணி நேர வீடியோ ஆதாரம் சிக்கி உள்ளது. அந்த வீடியோவை பார்த்தால் இந்த நாடு எப்படி உள்ளது. எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக புரியும். இவர்கள் ஆட்சியில் அநியாயம் நடக்கிறது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு மாநில கட்சிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அவர்களால் நானும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறேன். ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி, ராஜஸ்தான் முதல்வர்களை மாற்ற பா.ஜ., முயற்சி செய்து வருகிறது. இந்த நாட்டை பா.ஜ., சர்வ நாசம் செய்ய முயற்சி செய்து வருகிறது. இந்த வீடியோ ஆதாரம் குறித்து பெரிய அளவில் விசாரணை நடத்த வேண்டும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த 3 மணி நேர வீடியோவை சிறிய அளவில் எடிட் செய்து விரைவில் அனைத்து மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.